திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது இயல்புநிலை திரும்பி கொண்டிருக்கிறது. 60 ஆயிரம் பக்தர்கள் வரை தினசரி தரிசனம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு திருப்பதியில் 25,000 என்ற எண்ணிக்கையில் 30 நாட்களுக்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் அந்த டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. அதோடு மட்டுமில்லாமல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் தேவஸ்தானம் நாள் ஒன்றுக்கு பக்தர்களுக்கு 30,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது.
இதற்காக ஒரு நாள் முன்பாக திருப்பதிக்கு சென்று காத்திருந்து கட்டண டிக்கெட்டுகளை வாங்கி திருமலைக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் தேவஸ்தானம் ஐஆர்சிடிசி மூலம் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அவற்றை ஐஆர்சிடிசி ஆன்லைனில் அவ்வப்போது வெளியிட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் ரூ.990 கட்டணம் செலுத்தி பக்தர்கள் அவற்றை முன்பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள் அன்று வேன் அல்லது கார் மூலம் திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து பக்தர்களை திருமலைக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் அழைத்து செல்லும்.
அங்கு ஐஆர்சிடிசி நிறுவனத்திலிருந்து டிக்கெட் வாங்கிய பக்தர்கள் பகல் 11 மணிக்கு சாமி கும்பிட கோவிலுக்குள் செல்லலாம். அதேபோல் ரூ.300 கட்டண தரிசனத்தில் அவர்கள் தரிசனத்திற்கு செல்லலாம். அவர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் டிக்கெட்டுக்கு உரிய லட்டு பிரசாதம் ஒன்றை பக்தர்களுக்கு ஐஆர்சிடிசி நிறுவன உதவியாளர் வாங்கி கொடுப்பார். அவர்களுக்கு திருச்சானூர் கோவிலிலும் தரிசன ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. பின்னர் ரெயில் நிலையத்திற்கு அவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள்.