சட்ட விரோத நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வரவும், பொதுத் துறை நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தேவை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் படித்த மாணவர் பவன்குமார் காந்தி, தனது தேர்வு விடைத்தாள் நகல்களை வழங்கக்கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் கேட்டிருந்த தகவல்கள் வழங்கப்படாததால் தொடர்ந்து மாநிலத் தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த தகவல் அறியும் உரிமைகள் ஆணையம் பவன்குமார் காந்தி கோரிய விவரங்களை வழங்க சட்டப் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கும் தகவல்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் முறைகேடுகளையும் சட்ட விரோத நடவடிக்கைகளையும் வெளிக்கொண்டு வரமுடியாது எனக் கூறிய நீதிபதி,
பொது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய கொண்டுவரப்பட்ட உன்னதமான சட்டம்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எனவும் குறிப்பிட்டார்.தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசு நிர்வாக நடவடிக்கைகளுக்கு அரசு அலுவலர்களை பொறுப்பாக்குகிறது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை விரைந்து முடித்துவைக்க வேண்டும் எனவும் தகவல்களை விரைந்து வழங்குமாறும் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.