கடப்பாரையால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அச்சன்குளம் ஓடை தெருவில் விவசாயியான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அரவிந்த் ராஜா(24), சுரேஷ் ராஜா(22) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சுரேஷ் ராஜா மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சிலருடன் மது குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் சுரேஷ் ராஜா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சாம்சன் மனோ என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் ராஜா மங்கம்மாள் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த சாம்சன் அவருடன் தகராறு செய்துள்ளார்.
இதில் கோபமடைந்த சாம்சன் கடப்பாரையால் சுரேஷ் ராஜாவின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சுரேஷ் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சுரேஷ் ராஜாவின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சாம்சன் மனோவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த மாதம் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் சுரேஷ் ராஜா கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.