உக்ரேனில் இருந்து ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்களை அந்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு உக்ரைன் தூதர் அறிவுறுத்தி உள்ளார்.
ரஷ்யா கடந்த 24ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்தப் போரினால் அப்பாவி மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை என்பதால் அங்குள்ள மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மேலும் வாகனம் வசதி இல்லாத சிலர் கால்நடையாகவே செல்கிற அவலத்தையும் வீடியோக்கள் காட்டுகின்றன.
இதற்கிடையில் இந்தப் போரினால் இரு நாட்டு ராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் ஐ.நா வுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கிஸ்லிட்ஸ்யா ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்களை உக்ரேனில் இருந்து அந்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் அறிவுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து போர் தொடங்கிய நாள் முதல் உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் 4300 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய ராணுவத்தின், 26 ஹெலிகாப்டர்கள், 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.