11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை எழிலகத்தில் சர்வே துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் தீபிகா என்பவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் அதிக நேரம் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த தீபிகாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து படிப்பதாக கூறி விட்டு அறைக்குள் சென்றுள்ளார். மதிய நேரத்தில் சாப்பிட அழைப்பதற்காக உஷா தீபிகாவின் அறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தீபிகா சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த உஷா கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.