மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் காவலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் பொம்மையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து பொம்மையா தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சானமாவு வனப்பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது பொம்மையாவின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த பொம்மையாவின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொம்மையாவின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.