வேன் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தங்கராஜ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் ஓட்டுனர் ஆவார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா தங்கராஜை விட்டு பிரிந்து சென்றார். கடந்த 18-ஆம் தேதி தங்கராஜ் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சவாரி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய போது அனிதா விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கராஜ் நாங்குநேரி சுங்க சாவடி அருகே திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதற்கிடையில் விஷம் குடித்தது குறித்து தங்கராஜ் தனது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.