விவசாயிகள் போராட்டத்திற்கு எந்த ஒரு கருத்தும் பதிவிடாத தோனியை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகிறார்கள்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது டெல்லியில் அத்துமீறி நுழைந்த விவசாயிகளை போலீசார் கடுமையாக தாக்கியதால் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் டெல்லி முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து எந்த ஒரு கருத்தும் பதி விடாதே தோனியை ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமன்றி கிரிக்கெட்டை அடுத்து தோனி தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வருவதால், அந்தப் புகைப்படங்கள், வீடியோவை பலருக்கும் முன்னுதாரணமாக காட்டி வைரலாகி வருகின்றனர்.