விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் வாழைத்தோட்டம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், மிஸ்ரிதா பிரிதுயூஷி என்ற 2 வயது மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீஜா தனது மகளுடன் நேற்று காலை வீட்டிற்கு அருகில் இருக்கும் சப்போட்டா மரத்தில் பழம் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து ஸ்ரீஜா துணி காய போட்டுக் கொண்டிருந்தபோது சிறுமி வீட்டிற்கு முன்புறம் இருக்கும் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். திரும்பி வந்த போது தனது மகள் காணாமல் போனதை கண்டு ஸ்ரீஜா அதிர்ச்சிடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டிற்கு முன்பக்கம் இருக்கும் சாலையின் மறுபுறம் உள்ள குளத்தில் குழந்தை தவறி விழுந்து இருக்கலாம் என கருதி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி குளத்தில் இருந்து சிறுமியின் சடலத்தை மீட்டனர். பின்னர் சிறுமியின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.