விவசாயிகளுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டங்களையும் பாஜக அரசு திரும்ப பெற வில்லை என்றால் பதவி விலக வேண்டுமென மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று தொடங்கியுள்ளது. அந்த போராட்டத்தால் நாடு முழுவதும் பொது போக்குவரத்து சேவை இயக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் பல்வேறு இடங்களில் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்து, வேன் மற்றும் ஆட்டோக்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி பெரிய மார்க்கெட்களில் மற்றும் மீன் அங்காடிகள் திறக்கப்படாமல் முழுவதும் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “மத்தியில் ஆளும் பாஜக அரசு, தான் கொண்டு வந்த மூன்று வேளைதான் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால் பதவி விலக வேண்டும். விவசாயிகளின் உரிமைகளை தியாகம் செய்துவிட்டு பாஜக அரசு பதவியில் நீடிக்க கூடாது. மேற்கு வங்காளத்தில் வெளியாட்கள் ஆதிக்கம் செலுத்துவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் அதிரடியாக கூறியுள்ளார்.