பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) பல சேவைகளுக்கான கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜன- 15ம் தேதி முதல் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயருகின்றன.
மினிமம் பேலன்ஸ்:
மெட்ரோ நகரங்களில் வங்கிக் கணக்கின் காலாண்டு சராசரி மினிமம் பேலன்ஸ் வரம்புத் தொகை 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மினிமம் பேலன்ஸ் – அபராதம்:
வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் இருப்புத் தொகையை வைத்திருக்காவிட்டால் அதற்குரிய கட்டணம் காலாண்டு முறையில் வசூல் செய்யப்படும். அது கிராமப்புறங்களில் 400 ரூபாயாகவும், நகர்ப்புற, மெட்ரோ நகரங்களில் 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
லாக்கர் கட்டணம்:
இதில் நகர்ப்புறம், கிராமப்புறம், மெட்ரோ பகுதிகளில் லாக்கர் வாடகையை பஞ்சாப் நேஷனல் வங்கி உயர்த்தியுள்ளது. அதன்படி நகர்ப்புறங்களில் லாக்கர் கட்டணம் 500ரூ உயர்த்தப்பட்டுள்ளது.
லாக்கர் இலவச வருகை:
ஒவ்வொரு வருடமும் வங்கி லாக்கரை இலவசமாகப் பார்வையிடுவதற்கான வருகை எண்ணிக்கை 12 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டினால் வருகை ஒன்றுக்கு 100ரூ கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு முன் இலவச வருகை எண்ணிக்கை 15 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்புக் கணக்கு:
14 தினங்களுக்கு பின் மூடப்படும் நடப்புக் கணக்குகளுக்கு இனி 800ரூ அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் அபராதத் தொகை 600 ரூபாயாக இருந்தது. இருப்பினும் 12 மாதங்களுக்குப் பின் மூடப்பட்ட கணக்குகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.
பரிவர்த்தனை கட்டணம்:
ஜனவரி 15ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 3 இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதன்பின் ஒரு பரிவர்த்தனைக்கு 50ரூ கட்டணம் வசூலிக்கப்படும். மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு இது பொருந்தாது.
டெபாசிட்:
சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கான வரம்பு குறைக்கப்பட்டு இருக்கிறது. நாளொன்றுக்கு இலவச டெபாசிட் வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.