திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகம்மாசத்திரம் ஊராட்சி வி.ஜி.கே.புரத்தில் வேணுகோபால் (55). இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு விமலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வேணுகோபால் சென்னை பள்ளிக்கரணையில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டை பிரசாந்த், வைஷ்ணவி என்ற தம்பதியினருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த சில நாட்களாக வைஷ்ணவி வீட்டு வாடகை தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேணுகோபால் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் வி.ஜி.கே.புரத்தில் அவர் வசிக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.