தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வந்தனர். அதேபோல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். நேற்று காலை 7 மணி அளவில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி மாநில தேர்தல் ஆணையரிடம் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் திமுக பிரமுகர் கதிரவன் உள்பட 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள கதிரவன் உள்பட 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.