நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது ராயபுரம் 49வது வார்டில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கிடையில் கள்ள ஓட்டு போட முயற்சி செய்ததாக திமுக நிர்வாகி ஒருவரை அதிமுகவினர் மடக்கி பிடித்தனர். மேலும் அந்த நபரை அவர்கள் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
மேலும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் விடுவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுகவினர் ராயபுரம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரை நிர்வாணத்துடன் திமுக பிரமுகரை அழைத்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இது குறித்து திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின்படி, தண்டையார்பேட்டை காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர்மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ஜெயக்குமார் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் கொடுத்த புகாரின்பேரில் திமுக தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.