பெட்ரோல் பங் மேலாளரிடம் இருந்து 4,50,000 ரூபாயை பறித்துச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சித்தாளந்தூர் பகுதியில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோடர்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் பங்கில் வசூலான தொகையை வங்கியில் செலுத்துவதற்காக 4,50,000ரூபாயை எடுத்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்றுள்ளார்.
அப்போது திருச்செங்கோடு மண்கரட்டுமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து சென்று வேணுகோபால் இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து வேணுகோபால் உடனடியாக திருச்செங்கோடு ரூரல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.