14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வரும் 28, 29ம் தேதிகளில் கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் என்று புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த இருநாட்களில் யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது. அதையும் மீறி பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையில் மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது.