வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை படுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.சுப்புலாபுரம் பகுதியில் வசித்து வந்த நந்தினி என்பவருக்கும் மதுரை மாவட்டம் பெரியசாமி நகரை சேர்ந்த முனீஸ் திவாகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. முனீஸ் திவாகர் விருதுநகர் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் திருமணத்தின்போது நந்தினியின் குடும்பத்தினர் பணம், நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுத்தனர்.
ஆனால் முனீஸ் திவாகர் மற்றும் அவரது குடும்பத்தினர் நந்தினியின் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முனீஸ் திவாகர் வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த நந்தினி உடனடியாக ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் முனீஸ் திவாகர், அவரது தந்தை ராமசந்திரன், தாய் வாசுகி, உறவினர்கள் ராஜா, சுமதி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.