மர்ம நபர்கள் வயதான தம்பதியினரை தள்ளிவிட்டு குடிசை வீட்டை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பால சமுத்திரத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இங்கு காவலாளியாக செல்ல முத்து(80) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதனால் செல்லமுத்து தனது மனைவியுடன் தோட்டத்தில் இருக்கும் குடிசை வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் தம்பதியினர் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் தோட்டத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் வீட்டின் கதவை திறந்து வயதான தம்பதியினரை வெளியே தள்ளிவிட்டு மின் இணைப்பை துண்டித்தனர்.
பிறகு குடிசையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லமுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தில் குடிசை முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குத் தகுதி செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.