தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், நியாய விலைக்கடை பணியாளர் சங்க தலைவர் ஜி.ராஜேந்திரன் மற்றும் சங்கத்தின் பொதுச்செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் தெரிவித்திருப்பதாவது, “டாக்பியா சங்கம் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 7.3.2002 அன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது அந்த சங்கத்தினருடைய கோரிக்கை எண் 9க்கு பதிலளித்துள்ள பதிவாளர் நியாயவிலை கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் நடந்தால் அதற்கு ரேஷன் ஊழியர்களே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.
எங்களது சங்கம் பதிவாளரின் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்வது முதல் ரேஷன் கடைகளுக்கு அனுப்புவது வரை உள்ள பணிகளை மேற்கொள்கிறது. அதேபோல் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகம் அரிசியின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக தனியே செயல்படுகிறது. முதன்மை சங்க அலுவலகங்கள் ரூட் சார்ட் முறையில் அரிசி அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
இவ்வாறு இருக்கையில் நியாயவிலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியினை தரமற்றது, தரமுள்ளது என்று கூற முடியாது. ரேஷன் கடைக்கு இரவு 12 மணிக்கு கூட லோடு வரும். அரிசி எடை குறைவு, கிழிந்த கோணிப்பை, கலோசு தொழிலாளர்கள் தொல்லை என பேசவே நேரம் சரியாக இருக்கும். இருப்பினும் ரேஷன் அரிசி தரமற்றதாக இருந்தால் திருப்பி அனுப்ப ஏற்று கூலி, லாரி வாடகை, கடையில் இருந்து எடுத்து செல்ல அதிகாரிகளின் உத்தரவு, இறக்கு கூலி என அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் தரமற்ற அரிசிக்கு நியாயவிலை கடை பணியாளர்களே பொறுப்பு என தாங்கள் கூறுவதை கைவிட்டு உடனடியாக இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும். நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு தரமான அரிசிகளை வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என்று தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் மனுவில் கூறப்பட்டுள்ளது. ரேஷன் ஊழியர்கள் பதிவாளரின் இந்த உத்தரவால் பீதியில் உள்ளனர்.