Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரூ 7 1/2 கோடியில் புதிய பேருந்து நிலையம்… அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த பொதுமக்கள்…!!!

குமுளியில் ரூ 7 1/2 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆணை பிறப்பித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வருகிறார்கள்.

தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியாக குமுளி அமைந்துள்ளது. இந்த குமுளியில் பேருந்து நிலையம் இல்லாததால் அனைத்து பஸ்களும் ரோட்டின் ஓரம் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வந்துள்ளன. இதனால் கோடைகாலத்தில் பயணிகள் குமுளி ரோட்டில் வெயிலில் நின்று மிகவும் சிரமப்பட்டனர். அதேபோன்று மழைக்காலத்தில் பயணிகளுக்கு ஒதுங்க இடமில்லை. எனவே குமுளியில் அடிப்படை வசதியுடன் புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் குமுளியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை பயன்பாடு இல்லாமல் இருந்து வந்துள்ளது. எனவே இந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைத்து கொடுக்க வேண்டுமென்று கூடலூர் நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து அவர்கள் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமிடம்  வலியுறுத்தினார்கள்.

இதை தொடர்ந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் பரிந்துரையின்படி தேனிக்கு வந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குமுளியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு ரூ 7 1/2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். இதனை அடுத்து நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்து கடிதம் அனுப்பி வருகிறார்கள்.

Categories

Tech |