தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சாமானியன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தை மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன மற்றும் தம்பிக்கோட்டை போன்ற படங்களை இயக்கிய ராகேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நக்சா சரண் நடிக்க, ராதாரவி, எம்எம் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சாமானியன் படத்தின் படக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது எம்.எம் பாஸ்கர் பேசியதாவது, ராமாயணத்தில் ராமன் 14 வருடங்கள் வனவாசம் சென்றார்.
பாண்டவர்கள் 12 வருஷம் வனவாசம் சென்றார்கள். அதேபோன்றுதான் ராமராஜனும் 10 வருடங்கள் கழித்து வந்திருக்கிறார். வனவாசம் சென்று வந்தவர்கள் எல்லாரும் அரசாண்டது போன்று ராமராஜனும் கண்டிப்பாக அரசாள்வார். இவர் நடித்த சோலை புஷ்பங்கள் என்ற திரைப்படத்தில் நான் டப்பிங் கலைஞராக பணியாற்றி இருக்கிறேன். ஆனால் தற்போது தான் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சிலர் இணையதளத்தில் எதற்காக இவரெல்லாம் திரும்ப நடிக்க வருகிறார் என்று மீம்ஸ் போடுவதாவதாக சிலர் கூறுகின்றனர். நீங்கள் ஏன் சுவாசிக்க வேண்டும் என்று கேட்பது எவ்வளவு அநாகரீகமான கேள்வியோ அப்படித்தான் ராமராஜனை பார்த்து கேட்பது இருக்கிறது.