ரஷ்யா உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசி குறித்து கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-5 என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை ரஷ்யா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இதுபற்றி அந்நாட்டின் அதிபர் புதின் கூறும்போது, ” உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா பதிவு செய்திருக்கிறது” என்று கூறி உலகையே அதிர வைத்துள்ளார். இருந்தாலும் தடுப்பூசி உருவாக்கத்தில் பல்லாயிரக் கணக்கானோருக்கு செலுத்தி சோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை குறித்த எந்த விவரங்களையும் அந்நாடு வெளியிடவில்லை.
அதனை சந்தேகித்த உலக நாடுகள், தடுப்பூசி விஷயத்தில் ரஷ்யா அவசரப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.ஆனால் அந்நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ, கொரோனா தடுப்பூசி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தொடங்கும் என கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி இந்த தடுப்பூசி தொடர்பான சந்தேகங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளார். இந்தநிலையில் சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மருத்துவர் புரூஸ் அய்ல்வார்டு நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” ரஷ்யாவின் தடுப்பூசி பற்றிய முடிவு செய்வதற்கு எங்களிடம் போதிய தகவல்கள் எதுவும் இல்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் மொத்தம் 9 தடுப்பூசிகள் இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் ரஷ்யா தடுப்பூசி அந்த ஒன்பது தடுப்பூசிகளின் இல்லை. மேலும் இந்த தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்களை பெறுவதற்கு உலக சுகாதார நிறுவனம், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்று கூறியுள்ளார். ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசி பற்றிய விவரங்களை வெளியிட வில்லை என்ற உலக அளவில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் அந்நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ நேற்று நிபுணர்களிடம் கூறுகையில், ” உலகின் முதல் தடுப்பூசி பற்றிய விமர்சனங்கள் பெரும்பாலும் சோதனைகள் பற்றிய தகவல்கள் இல்லாததால் மட்டுமே வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாகவே 6 தடுப்பூசி களுக்கு பயன்படுத்தப்பட்ட மேடையில் தான் எங்கள் தடுப்பூசி பற்றிய விவரங்களை பதிவு செய்தோம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. எங்கள் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறும். வருகின்ற நாட்களில், திங்கட்கிழமை அன்று எங்கள் தடுப்பூசியின் முதல் மருத்துவ மற்றும் மருத்துவ பரிசோதனைகள் பற்றிய தகவல்கள் அனைத்தும் கட்டாயம் வெளியிடப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.