Categories
மாநில செய்திகள்

ரயில் தட்கல் டிக்கெட்டு புக்கிங்கில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு – 60 பேர் கைது

ரயில் முன்பதிவில் தட்கல் டிக்கெட்டுகளை தடைசெய்யப்பட்ட மென்பொருள் மூலம் முறைகேடு செய்த ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திட்டமிடாமல் அவசரமாக ரயில்களில் பயணம் செய்யும் நிலை ஏற்படும்போது உடனடியாக டிக்கெட் பெறுவதற்காக தட்கலில் விண்ணப்பிக்கும் முறை இருந்து வருகிறது. அவசரமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் இந்த தட்கல் டிக்கெட் பதிவை நம்பிதான் இருக்கிறார்கள். ஆனால் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் ரயில் நிலையங்களில் தட்கல் பதிவுக்காக காத்திருப்போர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் தட்கல் டிக்கெட் பதிவில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி தளத்தை ஏஜெண்டுகள் சிலர் தடைசெய்யப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்தி முடக்கியதும், அதன் மூலம் வேகமாக தட்கல் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொண்டதும் அம்பலமாகியுள்ளது.

அதாவது சட்டவிரோதமாக ஏஎன்எம்எஸ், எம்ஏசி, ஜாகுவார் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி சில ஏஜெண்டுகள், ஐஆர்சிடிசி இணையதளத்தில் இருக்கும் லாகின் கேப்சா, புக்கிங்க் கேப்சா, வங்கி ஓடிபி ஆகியவற்றை எளிதாகக் கடந்து சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தனர். இதனால் பொதுமக்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில் பெரும் இடையூறு இருந்தது.

ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்ய பொதுமக்களுக்கு 2.55 நிமிடங்கள் ஆகும். ஆனால் முறைகேடாக மென்பொருளைப் பயன்படுத்தி வெறும் 1.48 நிமிடங்களிலேயே ஏஜெண்டுகள் தத்கல் டிக்கெட் முன்பதிவு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இதில் இருந்த அனைத்துப் பாதுகாப்புக் குறைபாடுகளும் களையப்பட்டுள்ளது. மேலும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட 60 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இனி அனைவருக்கும் தக்கல் டிக்கெட் எளிதில் கிடைக்கும் எனவும் ரயில்வே பாதுகாப்பு படை ஜெனரல் கூறியுள்ளார்.

Categories

Tech |