கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பான பிஎப்சிஐ சார்பாக 2020ல் பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில் கோவை- பாலக்காடு பாதையில் ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம் யானைகள் குறுக்கிடுவதை முன்பே கண்டறிந்து ரயில் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு ரயில்வே மற்றும் வனத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இருப்பதாவது, கோவையில் இருந்து கேரளத்தை இணைக்கும் ரயில்தடம் உள்ள பகுதிகளில் 460 ஏக்கர்பரப்பில் யானைகள் வசித்து வருகின்றன.
இதனிடையில் யானைகளால் ஏற்பட்ட பயிர் சேதம், மனித உயிர் இழப்புகளுக்கு 2015 -2020 வரை 5.15 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது யானைகள் பலியாவதை தடுப்பதற்கு கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிகாக 4 கண்காணிப்பு கோபுரங்கள் விரைவில் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை டூ பாலக்காடு ரயில்பாதையில் யானைகள் நடமாட்டத்தை அறிந்து முன்கூட்டியே ரயிலின் வேகத்தை குறைப்பதற்கு ரயில் ஓட்டுநர்களை எச்சரிக்கும் தடுப்பு அமைப்பை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கை பிப்ரவரி 24-ம் தேதி பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராம கிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் போன்றோர் விசாரித்தனர். அப்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக யானைகள் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிவது எந்த அளவுக்கு சாத்தியமாகும்…? அதை நடைமுறைப்படுத்த எவ்வளவு அவகாசம் தேவை என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெற்கு ரயில்வே மற்றும் வனத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.