ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோசின் ஷேக் என்ற பெண் ராக்கி கயிறு அனுப்பியிருக்கிறார்.
சகோதர, சகோதரிகளுக்கு இடையில் இருக்கின்ற உறவை போற்றக் கூடிய வகையில் ரக்ஷாபந்தன் ஆகஸ்ட் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோசின் ஷேக் என்ற பெண்மணி பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.பாகிஸ்தானில் பிறந்து திருமணத்திற்குப் பின்னர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்க்கு புலம்பெயர்ந்துள்ள இவர், சென்ற 25 வருடங்களாக பிரதமர் மோடியுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடி வருகின்றார். இதுபற்றி அவர் கூறும்போது, “30 முதல் 35 வருடங்களாக பிரதமர் மோடியை எனக்கு நன்றாக தெரியும்.
முதலில் அவரை டெல்லியில்தான் சந்தித்தேன். கராச்சியிலிருந்து திருமணமாகி இங்கு புலம்பெயர்ந்து உள்ளதை அறிந்த அவர், என்னை சகோதரி என்று அழைத்தார். எனக்கு சகோதரர்கள் யாரும் இல்லை.இரண்டு வருடங்களுக்குப் பின்னர் டெல்லியில் மீண்டும் அவரை சந்தித்த போது நான் அவருக்கு ராக்கி கயிறு ஒன்றினை கட்டினேன். மீண்டும் மற்றொரு ரக்ஷா பந்தன் போது குஜராத் முதலமைச்சராக வேண்டும் என்று வாழ்த்தி இருந்தேன். அப்போது அவர் அதனைக் கேட்டு சிரித்தார். குஜராத் முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற பின்னர், மீண்டும் அவரை சந்தித்தேன்.அப்போது எனது பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக்கொண்டதாக கூறினேன். கொரோனா காரணமாக அவரை நேரில் சந்தித்து என்னால் ராக்கி கட்ட முடியவில்லை. அதனால் ராக்கி கயிறு மற்றும் ஒரு புத்தகத்தை அனுப்பி இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.