இந்தியாவில் யுபிஐ சேவை வசதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அப்போது இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தொடங்கி வைத்தார். கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த வகை டிஜிட்ட்டல் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்த பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால் யுபிஐ சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் யுபிஐ சேவை விதியில் மாற்றத்தை கொண்டு வந்து யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகியது.
அதாவது ஒவ்வொரு யுபிஐ பண பரிவர்த்தைக்கும் கட்டணம் வசூலிப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பங்குதாரர்களிடம் கருத்து கோர உள்ளது என்றும் இது குறித்து முன்மொழி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் பொதுமக்கள் நலன் சார்ந்தது என்று நாங்கள் பார்க்கிறோம். எனவே டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும். அப்போது தான் இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவது ஆர்வத்தை ஏற்படுத்தும். டிஜிட்டல் மயமாக்கள் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். எனவே டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு இது சரியான தருணமல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை நாம் மேலும் மேலும் ஊக்கப்படுத்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.