பழங்கால சாமி சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னம்படுகை பகுதியில் பழங்கால கோவில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடுதல் கண்காணிப்பாளர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, பிரேம் சாந்தகுமாரி, பிரபா ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது கருப்பசாமி சிலை மற்றும் ஐயப்பன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பதுக்கி வைத்திருந்த தங்கமணி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சிலை திருடப்பட்டதா? வேறு யாருக்கேனும் தொடர்ப்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.