குட்டி ஈன முடியாமல் யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொளுவபெட்டா காப்பு காட்டில் உள்ள தேன்கல்லை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன், உதவி வன பாதுகாவலர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர்.
இதனை அடுத்து கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் 28 முதல் 30 வயதுடைய அந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது வயிற்றில் இறந்த நிலையில் குட்டி ஒன்று இருந்தது. பிரேத பரிசோதனை நடத்தியதில், பிரசவத்தின் போது குட்டியை ஈன முடியாமல் தாய் யானை இறந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி யானை மற்றும் அதன் குட்டியை புதைத்தனர்.