மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகள் தொடர்பாக ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் நிரந்தர வைப்பு தொகையாக ரூபாய் 3 ஆயிரத்து 524 கோடி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்துகிறது.அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இழப்பீடாக செலுத்தப்பட்ட தொகையை 1 கோடியே 51 லட்சம் நீதிமன்ற ஊழியரால் கையாடல் செய்ததாக வெளியாகியுள்ளது.
மேலும் இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், இப்பிரச்சனை சம்பந்தமாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அதன்படி மூன்று குழுக்கள் அமைத்து மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, குழுக்கள் ஆய்வு நடத்தி அளித்த அறிக்கையை மேற்கோள்காட்டி உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 322 மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் நிரந்தர வைப்பு தொகையாக கடந்த ஜனவரி வரை 3 ஆயிரத்து 524 கோடி ரூபாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் கோரப்படாத இழப்பீடுகளின் வட்டி மட்டுமே 40 கோடி ரூபாய் வரை சேர்ந்துள்ளது எனக்கூறி பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கான இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வாகன விபத்து வழக்குகளை சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்கள் விசாரிப்பதற்கு பதிலாக, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் போல், அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் தலைமையில் தனி தீர்ப்பாயங்கள் அமைக்கலாம் என யோசனை ஒன்றை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு என மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைப்பதன் மூலம் உயர் நீதிமன்றமானது, தனது அரசியல் சாசன விவகாரங்களில் கவனத்தை செலுத்த முடியும் என்ற ஒரு ஆலோசனையும் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக இந்த விபத்து இழப்பீடு வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவர்களை அடையாளம் கண்டு இந்த தொகைகளை வழங்க வேண்டும் அல்லது அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையை வெளியிடும்படி தலைமை பதிவாளருக்கு உத்தரவிடுமாறு தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த விபத்து இழப்பீடு தொகையை டெபாசிட் செய்வதற்காக தனி வங்கி கணக்கை தொடங்க வேண்டும் என பல உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி இந்த விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.