அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமூகரெங்கபுரம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தயாளன் வள்ளியூரில் இருந்து சமூகரெங்கபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தெற்கு கள்ளிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தயாளன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட தயாளன் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தயாளனை உடனடியாக மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தயாளன பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.