மோட்டார் சைக்கிள் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விச்சு(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விச்சு பனிச்சவிளை பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த டெம்போ வேன் விச்சுவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த விச்சு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விச்சுவின் சடலத்தை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.