மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள டி. கேணிப்பட்டு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரிதரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிரிதரன் தனது நண்பரான ரவிவர்மன் என்பவருடன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில் கன்னிகாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரவிவர்மன் மீது காரின் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கிரிதரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.