மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் அருங்குணம் கிராமத்தில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் கரும்பு வெட்டும் தொழிலாளர்களான விஜய், மோகன் ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் புதுப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தவிழ்ந்தபுத்தூர் பகுதியில் சென்ற போது அரசு நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோகன், வினோத்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.
இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகன் மற்றும் வினோத்குமாரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.