மோடி எழுதிய கடிதத்தை திரும்ப அவருக்கே அனுப்பும் நூதன போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது அந்த மாநிலத்தின் ஆளுநராக கமலா பெனிவால் இருந்துள்ளார். அப்போது மாநில அரசின் உரிமைகளில் கவர்னர் தலையிடுவதாகவும், அவரை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தியும் அப்போதைய முதல்வராக இருந்த மோடி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.மேலும், ஆளுநருக்கு எதிராக குஜராத் மாநிலத்தில் மாபெரும் கண்டன ஊர்வலத்தையும் அவர் மேற்கொண்டார்.
இந்நிலையில் அந்தக் கடிதத்தை நினைவுப்படுத்தி அதனை மோடிக்கே அனுப்பும் போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மேற்கொண்டிருக்கின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்தில் பிரதமர் அன்று எழுதிய கடிதத்தின் நகல்களை அவருக்கே தபால் மூலம் அவர்கள் இன்று அனுப்பி வைத்தனர்.இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், ‘குஜராத் முதல்வராக இருந்தபோது, மாநிலத்தின் உரிமையில் தலையிடுவதாக கூறி, ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென மோடி வலியுறுத்தினார்.
ஆனால் அவரே பிரதமரான பிறகு தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு, ராஜ்பவன் மூலம் கொள்ளை ஆட்சியை நடத்த முயற்சி செய்து வருகிறார். மேலும் இது ஜனநாயக முறைக்கு எதிரானது. எனவே அன்றைக்கு முதல்வராக இருந்தபோது அவர் எழுதிய கடிதத்தை நினைவுகூறும் வகையில், அந்த கடிதத்தை அவருக்கே அனுப்பியிருக்கிறோம். மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்’ என்றும் ஈஸ்வரன் கூறியுள்ளார்.