இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூர் பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இளையராஜாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று வீட்டில் இருக்கும் அறையில் மாரியம்மாள் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மாரியம்மாளின் காது, மூக்கு உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வந்ததால் மாரியம்மாள் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் மேலத்தானியம்- காரையூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளையராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.