திமுக தலைவர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தி பெயர் போடாமல் தரக்குறைவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அக்கட்சியின் தொண்டர்கள் கிழித்துவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினர் காவல் நிலையங்களில் புகார் அளித்தாலும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அச்சடித்தவர் யார் என்ற பெயரே போடாமல் கோவை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனைக் கண்டு ஆவேசமடைந்த திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அந்தச் சுவரொட்டிகளை தாங்களே கிழித்தனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டியை ஒட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.