தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 23ஆம் தேதியான வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து முழு ஊரடங்கு நாளில் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள், ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமின்றி அனைத்து மாவட்ட ரயில் நிலையங்கள் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இந்த தளர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட அனைத்து நடைமுறைகளும் ஜனவரி 23ஆம் தேதியும் பின்பற்றப்படும்.