சென்னையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரியை ராஜா என்பவர் கார் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு வண்டலூர்-மீச்சூர் போக்குவரத்து சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது கன்டெய்னர் லாரி மலையம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள மின் கம்பம் ஒன்றின் மீது வேகமாக மோதியது. இதனால் அந்த மின் கம்பம் உடைந்து கீழே விழுந்ததோடு, அந்த கன்டெய்னர் லாரி சாலையோரம் உள்ள கால்வாய் மீது ஏறி சென்று அங்குள்ள வயல் பகுதியில் கவிழ்ந்து விட்டது.
மேலும் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ராஜாவிற்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே ராஜாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வயலில் கவிழ்ந்து கிடந்துள்ள கன்டெய்னர் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.