மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக ஜாமினில் இருக்கிறார். இதற்கிடையே பாட்னாவிலுள்ள வீட்டில் சென்ற சனிக்கிழமையன்று இரவு மாடிப்படியிலிருந்து லாலு பிரசாத் தவறிவிழுந்தார். இவற்றில் லாலுவின் கால் மற்றும் தோள்பட்டை பகுதியில் முறிவு, காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
அதன்பின் அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த புதன்கிழமை டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அவரின் மூத்த மகளும், ராஜ்யசபா எம்பியுமான மிசா பாரதி இன்று தெரிவித்துள்ளார். அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் புகைப்படத்தை மிசாபாரதி தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
தந்தையின் உடல் நிலை பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களின் பிரார்த்தனையாலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நல்ல மருத்துவ சிகிச்சையாலும் தந்தையின் உடல்நிலை மிகவும் முன்னேற்றமடைந்து வருகிறது. தற்போது அவரால் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார முடிகிறது. மேலும் ஆதரவுடன் அவரால் நிற்கமுடியும். எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்த்து போராடும் கலை லாலுவைவிட வேறு யாருக்கும் தெரியாது. இதனிடையில் வதந்திகளுக்கு கவனம் செலுத்தவேண்டாம்” என தெரிவித்து இருக்கிறார்.