கல்லாபுரம் ஊராட்சி பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதி செய்து கொடுத்து விட்டு எங்கள் ஊருக்கு ஓட்டு கேட்டு வாருங்கள் என்று பதாகை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், வேட்பாளர்கள் போன்ற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் கல்லாபுரம் ஊராட்சி பூளவாடி புதுநகரில் உள்ள புரட்சிதாய்புரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒரு பதாகையை வைத்துள்ளனர்.
அந்த பதாகையில் மின்சார வசதி, சாலை வசதி, வீட்டு மனை பட்டா வசதி போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்த பிறகு வாக்கு சேகரிக்க வருமாறு குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து வாக்கு விற்பனைக்கு அல்ல என்றும், வாக்குறுதியை நிறைவேற்றிபவர்களுக்கு மட்டுமே வாக்கு என்றும் அந்தப் பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.