நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாடலிங் துறையை சேர்ந்த மீரா மிதுன் சமீப காலமாக சர்ச்சையாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பல நடிகர்களையும் இழிவாக பேசி சர்ச்சையான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இது ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது தாழ்த்தப்பட்ட மக்களை மிகக் கேவலமாக திட்டியதுடன், திரைப்படத்துறையில் இருந்தே தாழ்த்தப்பட்ட சமூகத்தை வெளியேற்ற வேண்டும் எனக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னி அரசு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து அவர் மீது கலகம் செய்யத் தூண்டுவது, ஜாதி மதம் விரோதத்தை தூண்டுவது, இரு பிரிவுகள் இடையே மோதலை உருவாக்குவது, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.