தமிழகத்தில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஜினியின் முடிவு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார். தேர்தல் அரசியலுக்கு வராமல் தமிழக மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியுமோ அதை ரஜினிகாந்த் செய்வார். மேலும் 1996ஆம் ஆண்டு போல குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுப்பார் என்று குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.