அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்தவருமான செல்லூர் ராஜூ, மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: அதிமுகவில் சகோதரர்கள் இடையே யுத்தம் சகஜமானது. அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்கள் மனம் திருந்த வேண்டும், மனம் மாற வேண்டும்.
மிகப்பெரும்பான்மை எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம் இருந்தால் கட்சி வளர்ச்சி அடையும். பிரச்சினைகளை பேசி தீர்க்க நிச்சயமாக முடியும். ஏட்டிக்கு போட்டி செய்வதால் எந்த பயனும் அடையபோவதில்லை. அதிமுகவில் இருந்து விலகியவர்கள் அதாவது ஓ பன்னீர்செல்வம் பொதுச்செயலாளரிடம் (எடப்பாடி பழனிசாமி) பேசி மீண்டும் கட்சியில் இணைய வேண்டும். உங்களுக்காக அதிமுகவின் கதவு திறந்தே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.