திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியிலிருந்து செம்பட்டி போகும் சாலையில் சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு இருக்கிறது. இங்கு மின்மயானம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பாக முடிவு செய்யப்பட்டது. இதனிடையே குப்பைகிடங்கு அருகேயுள்ள அஞ்சுகம் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அப்பகுதி பொதுமக்கள் 200க்கும் அதிகமானோர் சின்னாளப் பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர். இந்நிலையில் அவர்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார்மனு கொடுக்க வேண்டும் என்று கேட்டனர்.
எனினும் அங்கு இருந்த பணியாளர்கள் செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் மற்றும் அலுவலர்கள் இதுவரை அலுவலகம் வரவில்லை என்று தெரிவித்தார். இதன் காரணமாக கோபமடைந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவலறிந்த பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன், முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டதுடன் அவர்களிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்டார். மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
அதன்பின் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது “எங்கள் பகுதியிலுள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என 10 வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அதற்கு இதுவரையிலும் தீர்வுகாணவில்லை. தற்போது மின்மயானம் கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இங்கு மின் மயானம் அமைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். மக்களுக்கு பாதிப்பு இல்லாத பகுதியில் குப்பைக் கிடங்கையும், மின் மயானத்தையும் அமைக்க வேண்டும். அத்துடன் இந்த பகுதியில் டாஸ்மாக்கடை ஒன்றும் வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதனையும் எங்கள் பகுதியில் அனுமதிக்கமாட்டோம்” என்று கூறினர்.