கிரீமியாவை ரஷ்யா உடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக கிவ் உள்ளிட்ட நகரங்கள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளது ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இது பற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும் போது உக்ரைனின் 40 சதவிகிதம் மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டது இதனால் நாடு முழுவதும் பெரும் மின்தடை ஏற்பட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து மின் உற்பத்தி பணியை சரி செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது மக்கள் மாலை நேரங்களில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் மின்விநியோக சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று முதல் அவசியமில்லாத மின் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அதிகமாக மின்சக்தியை நுகரும் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மின் நுகர்வை கவனமாக பயன்படுத்தினால் அடுத்து வரும் நாட்களில் மின்தடை நேரம் படிப்படியாக குறைக்கப்படும் என கூறியுள்ளார்.