நேற்று ஒரே நாளில் 26 ஆயிரத்து 833 பேர் மருத்துவ முகாம் மூலம் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் நோய்த்தொற்று குறையாமல் குறிப்பிட்ட பகுதிகளான அண்ணா நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தப் பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாக 15 மண்டலங்களில் தினமும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று 507 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது . இதில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை, அண்ணா நகரில் 59 மருத்துவ முகாம்களும் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற 507 மருத்துவ முகாம்களில் 26 ஆயிரத்து 833 நபர்கள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 1770 நபர்கள் சிறு அறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மே மாதம் முதல் நேற்று வரை மொத்தம் 28 ஆயிரத்து 186 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. அதில் 16 லட்சத்து 19 ஆயிரத்து 789 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர்.
தினமும் நடைபெறும் மருத்துவ முகாமினை அமைச்சர்கள். சுகாதாரத்துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் நேற்று ஆணையர் பிரகாஷ் தலைமையில் சென்னை மாவட்ட தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க சமுதாய அமைப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.