இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற முன்னாள் துணை அதிபர் அவரது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார் .
மாலத்தீவிற்கு கருங்கல் இறக்கிவிட்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு திரும்பிய விர்கோ என்ற இழுவை கப்பலில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் சட்டவிரோதமாக நுழைந்தார் . இந்த இழுவை கப்பல் நடுக்கடலில் வந்தபோது நேற்று முன்தினம் அதிகாலை தூத்துக்குடி கடலோர காவல் படையினர் மறித்து சோதனை செய்தனர் . அதில் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல்கபூர் இருப்பது தெரியவந்தது .
அவரை கடலோர காவல் படையினர் தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு அழைத்து வந்து கப்பலில் வைத்து விசாரணை நடத்தினர் .அகமத் மாலத்தீவில் இருந்து எப்படி தப்பினார் என்றும் இந்தியாவில் யாருடன் தொடர்பு வைத்துள்ளார் என்றும் விசாரணை நடத்தப்பட்டது . இதனிடையே மாலத்தீவு அரசிடம் இருந்து டெல்லி வெளியுறவு துறைக்கு அகமது அதீப்பை தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்கு படி கடிதம் வந்துள்ளதாக கூறப்படுகிறது .
இந்தநிலையில் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து நீண்ட விசாரணைக்கு பின் அகமது அதீப் மாலத்தீவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார் . சர்வதேச கடற்பகுதியில் மாலத்தீவு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .