கோவாவில் போண்டா தாலுகாவில் உள்ள பெத்தோரா என்ற கிராமத்தில் பிபின் கடம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 14 வயது மகள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான மகளை பிபினின் மனைவி பராமரித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிபினின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆகிவிட்டார். மற்றவர்கள் உதவியின்றி மகளால் இயங்க முடியாத நிலை இருப்பதால் மகளை கவனித்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பிபின் வேலைக்கு சென்ற பிறகும் அவளுக்கு உணவு அளிக்கக்கூட ஆள் இல்லாமல் தவித்தார்.
எனவே மகளுக்கு நேரத்திற்கு உணவு அளிக்கும் ரோபோவை வாங்க திட்டமிட்டார். ஆனால் விபின் எதிர்பார்த்த மாதிரியான ரோபோ சந்தையில் கிடைக்கவில்லை. அதனைப் போல ஒரு ரோபோவை தானே உருவாக்க திட்டமிட்டார். தொழில்நுட்ப அறிவோ, அனுபவமோ இல்லாத பிபின் இணையதளங்கள் மூலம் ரோபோ செய்யும் முறைகளை கற்றறிந்தார் 4 மாத ஆராய்ச்சிக்கு பிறகு இவரை சொந்தமாக ரோபோவை உருவாக்கினார். அந்த ரோபோ முன்தட்டில் உணவு வைத்தால் குரல் உத்தரவுகளை பின்பற்றி நாம் சொல்லும் உணவுகளை எடுத்து ஊட்டி விடுகிறது. அதற்கு ‘அம்மா ரோபோ’ என்று அவர் பெயரிட்டுள்ளார். பிபின் கூலி வேலைக்குச் சென்ற பிறகு அவரது மகளுக்கு ரோபோ தினமும் நேரத்துக்கு உணவு அளித்து வருகிறது. பிபின் இந்த உருவாக்கத்தை கோவா மாநில கண்டுபிடிப்பு கவுன்சில் வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த ரோபோவை மேலும் திறன் உள்ளதாக மாற்ற தேவையான நிதி உதவி அளிப்பதுடன் வர்த்தக சந்தையில் விற்பனை செய்ய உதவுவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.