Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாறிய மண்.. மகசூல் இல்லை.. விவசாயிகள் வேதனை..!!

கஜா புயல் சீற்றம், மண் பாதிக்கப்பட்டு மகசூல் இல்லாமல் போனது, விவசாயிகள் பெரும் வேதனை..!

நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்ணின் தன்மை மாறியதால், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலையில் மகசூல் பொய்த்து போய் விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

90 நாட்களில் பலன் தரக்கூடிய பணப் பயிரான நிலக்கடலையை நாகை மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ஓரளவு மகசூல் கிடைத்தாலே போதிய வருமானம் கிடைத்து விடும் என்பதாலும், நிலக்கடலை செடி கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாகும் என்பதாலும்,  நிலக்கடலை பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் கஜாபுயல் சீற்றத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்ட கடலோர கிராமங்களில் கடல்நீர் உட்புகுந்து மண்ணின் தரம் மாறுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மண்ணின் தன்மை மாறி, கடந்த முறை நல்ல மகசூல் தந்த C7 என்கிற நிலக்கடலையின் ரகம் தற்போது வெறும் செடியாகவே  இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கஜா புயல் பாதித்த கண்டியன் காடு, வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி, விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலைக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

C7 ரக நிலக்கடலை விதை முளைக்காமல் போனநிலையில், விதை விற்பனை செய்த வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் கேட்டபோது பல பகுதிகளில் நன்றாக விளைந்து உள்ளது என்றும், கடலோரத்தில் வசிக்கும் பகுதிகளில் கஜா புயலுக்கு பிறகு மண்ணின் தன்மை மாறியதால் முளைக்காமல் போய் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து நாகை மாவட்டம் வேளாண் துறை அதிகாரிகள் பதிலளிக்க மறுத்து விட்டனர். எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |