மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சமீபத்தில் 34% அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட்டதைதொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றது. அந்த வகையில் மே 1ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் ஆயிரக்கணக்கான மாநில அரசு ஊழியர்கள் பலன் பெற இருக்கின்றனர்.இப்போது 5 சதவீத DA உயர்வுக்குப் பிறகு, சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி தொகை தற்போது 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில், ‘மாநில அரசு ஊழியர்களின் நலன் கருதி இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஐந்து சதவீதம் உயர்த்தி அறிவிக்கிறேன். புதிய கட்டணம் மே 1 முதல் அமலுக்கு வரும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மார்ச் 30, 2022 அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை வழங்க ஒப்புதல் அளித்திருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசின் கருவூலத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பு ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடியாக இருக்கும் என்றும் DA அறிவிப்பால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.